search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கொலை"

    • கடந்த 5-ந் தேதி மனோகரனும், வேலுசாமியும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.
    • சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பொன்னாக்காணியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). விவசாயி.

    இவரது உறவினர் பனப்பட்டியை சேர்ந்த வேலுசாமி என்ற கந்தசாமி (வயது 56).

    கடந்த 5-ந் தேதி மனோகரனும், வேலுசாமியும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    இதனை பார்த்த உறவினர்கள் 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் 2 பேர் பலியானதை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனோகரன், வேலுசாமி ஆகியோரை யாரோ மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் இறந்த மனோகரனின் மனைவி, மகள் மற்றும் மருமகன் இடையர்பாளையத்தை சேர்ந்த சத்தியராஜ் (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாருக்கு மருமகன் சத்தியராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மாமனார் மனோகரன் குடித்த மதுவில் பொட்டாசியம் சயனைடு கலந்து கொடுத்து கொன்றதாக தெரிவித்தார். மனோகரனுக்கு வைத்த குறியில் சிக்கி வேலுசாமியும் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சத்தியராஜை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் சேலத்தில் உள்ள கோழி தீவன நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். நானும் மனோகரனின் மகள் மாசிலாமணியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் எனது மாமனார் கடந்த சில மாதங்களுக்கு அவருக்கு சொந்தமான 37 சென்ட் நிலத்தை ரூ.37 லட்சத்துக்கு விற்பனை செய்தார். நான் அவரிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் எனக்கு பணம் கொடுக்க மறுத்து விட்டார். நிலத்தை விற்ற பணத்தில் அவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி டிரைவரை வைத்து ஓட்டி வந்தார். மேலும் பணத்தை ஜாலியாக செலவு செய்து வந்தார்.

    இதுகுறித்து நான் எனது மனைவியிடம் கேட்டபோது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து எனது மனைவி என்னிடம் கோபித்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். நான் பலமுறை அவரது வீட்டிற்கு சென்று அழைத்தும் அவரது தந்தை மனோகரன் என்னுடைய மனைவி என்னுடன் வருவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

    பணமும் தராமல் எனது மனைவியையும் சேர்ந்து வாழ விடாமல் மனோகரன் இருந்து வந்தார். இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனையடுத்து நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். போலீசில் சிக்காமல் எப்படி கொலை செய்யலாம் என இணையதளத்தில் வீடியோக்களை தேடிப் பார்த்தேன்.

    பின்னர் ஆன்லைன் மூலமாக பொட்டாசியம் சயனைடு விஷத்தை வாங்கினேன். பின்னர் வேலை விஷயமாக தர்மபுரிக்கு சென்ற போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் ரூ.310 பணம் கொடுத்து குவாட்டர் பிராந்தி வாங்கினேன். பின்னர் வீட்டிற்கு வந்த நான் மதுபாட்டிலை திறந்து ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த பொட்டாசியம் சயனைடு விஷத்தை கலந்தேன்.

    கடந்த 4-ந் தேதி எனது குழந்தையை பார்ப்பதற்காக எனது மாமனார் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த மனோகரனிடம் யாருக்கும் தெரியாமல் சயனைடு விஷம் கலந்த மதுவை கொடுத்தேன்.

    நான் அடிக்கடி எனது மாமனாருக்கு மது வாங்கிக் கொடுப்பேன். அதனால் என் மீது சந்தேகம் ஏற்படாமல் மாமனார் மதுவை வாங்கிக் கொண்டார். பின்னர் நான் எனது வீட்டிற்கு சென்று விட்டேன்.

    5-ந் தேதி எனது மாமனார் மனோகரன், வேலுச்சாமி என்பவருடன் சேர்ந்து விஷம் கலந்து மதுவை குடித்தார். சிறிது நேரத்தில் 2 பேரும் இறந்தனர். 2 பேரையும் போலீசார் பிரேத பரிசோதனை செய்தால் விஷம் குடித்து இறந்தது தெரிந்து விடும் என்பதால் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என அங்கு இருந்த பெண்களிடம் கூறினேன். அவர்களும் பிரேத பரிசோதனை வேண்டாம் என கூறினர்.

    ஆனால் உடல்களை தராமல் போலீசார் பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் எனது மாமனாருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததை போலீசார் கண்டு பிடித்தனர். நான் எனது மாமனாரை மட்டுமே கொலை செய்ய திட்டமிட்டேன். ஆனால் வேலுசாமி இதில் வந்து சிக்கி கொண்டார். அவர்களை நான் கொலை செய்தது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கொஞ்சம் பதுங்கியே இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் போலீசார் சத்தியராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×